Tuesday, 14 April 2015

தையா ??? சித்திரையா ???


??????????????????????????????

பாட்டன், முப்பாட்டன், பூட்டனின் வரலாறு தெரியாதது போல ஆகிவிட்டது எம்மவர் தலைமுறை, யாரிடம் சென்று கேட்டாலும் பாட்டன் பெயர் சில பேரு சொல்லுவாங்க ஆனா நிறையா பேருக்கு தெரியாதா சமூகத்திலே வாழுகின்றோம், இதில் அடுத்த விடயம் தமிழ் புத்தாண்டு தை முதல் நாளா அல்ல சித்திரை முதல் நாளா என்ற ஒரு குழப்பம், இந்த விடயம் இப்ப ஆரம்பித்தது அல்ல மற்றும் இப்படி ஒரு விடயம் விவாததிற்கும், அரசியலாகவும் மாறியது மிகவும் வறுத்த பட வேண்டிய நிலை.

தனி மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் சமூகத்தின் பழக்கவழக்கங்களை கேள்வி கேட்காமலே பின்பற்றுகின்றோம். சில தனி மனிதர்கள் அப்படிப்பட்ட நீண்ட நாளைய நடைமுறையை மாற்றி அமைக்க முனையும்போது அதை மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் கையாள வேண்டும், உதரணத்துக்கு இங்கு புகை வண்டி வந்த காலக்கட்டதில் அது ஒரு எமனை போலத்தான் பார்க்கப்பட்டது, காரணம் என்னவெனில் அந்த தனி மனிதனின் மேல் உள்ள பெரும்பான்மை மக்களின் நிலை மாறும்போது, அரசியல் கட்சிகளை விரும்பாத தமிழர்கள் அதனை சொல்பவரை பொறுத்து, சொல்லும் கட்சியை பொருத்து, அதன் கொள்கைகளைப் பொருத்தும் தமிழ் கலாச்சாரம் சார்ந்ததொரு இதுபோன்ற ஒரு முடிவினை ஆதரிப்பதோ, ஆதரிக்காமல் போவதோ, தமிழ் சமூகத்திற்கு ஒரு பின்னடவைதான் ஏற்ப்படுத்தும், சரி சரியல்ல என்பதனை தாண்டி, ஒரு கலாச்சாரம் சார்ந்த தமிழர்கள் வெகுவாக கொண்டாடுகின்ற ஒரு பண்டிகையை மாற்றியமைக்கும் பொழுது அதற்க்கு சில வருடங்கள் போதிய விழிப்புணர்வை எற்ப்படுத்தி மக்களை தயார் செய்து அதன்பின் பெரும்பான்மையான மக்களுன் விருப்பத்தின் அடிப்படையில், பகுத்தருவின், புரிதலின் அடிப்படையில் மாற்றத்தை கொண்டுவரவேணும்.

இல்லையெனில் தமிழ் சார்ந்த இப்படியொரு முடிவு சரியா என்பதனைவிட அதனை நடைமுறைப் படுத்திய விதம் சரியா என்ற கேள்வி எழுதுவதை தவிர்க்குமுடியாது.

இப்படி போயிட்டே இருக்கும் போது, நம்மவரின் பல முகங்ககளை காணமுடிந்தது, அதில் சில :P 


  • இந்துத் தமிழர் 
  • கிருஷ்துவத் தமிழர் 
  • முஸ்லிம் தமிழர் 
  •  தமிழிலில் பேரு வையுங்க, தமிழே என் மூச்சு என்று கிடைத்த மேடையில் முழங்கிவிட்டு தன குடும்பத்தில் அதனை பின்பற்றாத தமிழர் 
  • தமிழே தன் உயிராக, வாழக்கையாக, கொள்கையாக கொண்டு வாழும் தனித்தமிழ் தமிழர் 
  • கடவுள் என்ற ஒருவர் உள்ளார் என்று நம்பும் தமிழர் 
  • கடவுள் நம்பிக்கை அற்ற தமிழர் 
  • காமராசரையும், அம்பேதகரையும் ஆய்வு செய்துவிட்டு அவர்களின் சாதியை கண்டுபிடிச்சுட்டு, திருவள்ளுவனின் சாதிய ஆராயும் சாதித்தமிழர் 
  • ஆரியத் தமிழர் 
  • திராவிடத் தமிழர் 
  • தவித்த வாய்க்கு தண்ணி தராத மலையாளியையும், கன்னடரையும், தெலுங்கரையும், நானும் திராவிடனா ? திராவிடன் என்பதே பொய் அது ஒரு கெட்டவார்த்தை என்று சொல்லும் தமிழர் 
  • இலங்கை பிரேச்சனையை ஆதரிக்கும் தமிழர் 
  • நடிகர்களை கடவுளாக பாவிக்கும் தமிழர் 
  • சமூகத்திற்கு ஏதேனும் செய்யத்துடிக்கும் தமிழர் 
  • சுற்றுச்சூழலை காப்பாற்றும் தமிழர் 
  • தகவல் தொழில்நுட்ப்பதில் பெட்டிக்குள் அடைப்பட்ட தமிழர் 
  • இது எதைப்பற்றியுமே கவலைபடாதா, தெரிந்துகொள்ள விரும்பாதா தமிழர் 
  • கட்சித் தமிழர் 

அய்யகோ இப்பவே தலை சுத்துதே, முடியல 

இவ்வளவு உட்பிரிவுகள் நம்மிடத்தில உள்ளது என்பதையும் அவர்கள் எவ்வகை தமிழர் என்பதைப் பொருது நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும் என்பது தெள்ளத்தெளிவு .. எனவே கீழ்க்காணும் பலரதின் சிந்தனைகளை, கருத்துகளை நீங்களே ஆராய்ந்து உமக்கு எது புத்தாண்டு என்று புரிந்துகொள்ளவும் !!! 

கட்டுரை நெம்ப பெருசா இருக்கும், இதில் சொல்லப்பட்டு உள்ளது பலருடையது, இணையத்தில் படித்தததை ஒருங்கிணைத்து உள்ளேன் 


ஜெயலலிதாவின் கருத்து: 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 சித்திரை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு ஏன் அறிவித்தது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று விளக்கம் அளித்தார். சித்திரை மாத துவக்கம் தான் தமிழ்புத்தாண்டின் துவக்கம் என்பதற்கான இலக்கியங்களை மேற்கோள் காட்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் புகார்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த தமிழ்ப் புத்தாண்டு தொடக்க விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை திருநாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். அதற்கான காரணங்கள் பல உள்ளன. சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன.இலக்கிய ஆதாரங்கள்: "சித்திரையே வா நம் வாழ்வில் முத்திரை பதிக்க வா' என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தினால், சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்குரிய பொருத்தமான நாள் என மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார். சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அகத்தியரின், "பன்னாயிரத்தில்' பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. "திண்ணிலை, மருப்பின் ஆடுதலை' என்று நக்கீரர் கூறியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார், முனைவர் ராசமாணிக்கனார். புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம் கொடுத்துள்ளார் கமலை ஞானப்பிரகாசர். 

நாமக்கல் கவிஞரும், "சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்' என்ற தன் வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத்தெரிவித்துள்ளார். கோடைக்காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியே ஏற்பு:

"தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் நாள்' என்று திடீரென அறிவித்த கருணாநிதியே, "சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படும்' என்று, தமிழ்ப் புத்தாண்டுக்கு பல முறை வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில், காவல் துறை குறித்த ஒரு வினாவிற்கு, 1990ம் ஆண்டில், பதிலளிக்கும்போது, சில காவல் அலுவலகங்கள் சித்திரை முதல் நாள் அமைய விருக்கின்றன, என்று பதில் அளித்தார். கைதிகளின் தண்டனை காலத்தைக் குறைப்பது குறித்து, 1990ம் ஆண்டு சட்டப்பேரவை விதி, 110ன்கீழ் அறிக்கை அளிக்கும் போது, "தமிழ்ப் புத்தாண்டு அன்று விடுதலை செய்யப்படுவர்' என்று தெரிவித்துள்ளார். அதாவது, சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த, 1935ம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பது எளிதில் பெறப்படும். கிறிஸ்துபிறப்பிற்கு, 30 ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்துகண்ட முடிவாகும் என்று மறைமலை அடிகளார் கூறியதாக, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில், சிறுவை நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.

விளக்கம்: உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது, தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று ஒட்டுமொத்த எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டு உள்ள உண்மை என்று பொத்தாம் பொதுவாகக்கூறி, தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக, சட்டத்தின் மூலம் கருணாநிதி மாற்றியமைத்தார். யார் கேட்டார் இந்தச் சட்டத்தை; இதனால் மக்களுக்கு என்ன பயன்? இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான காரணத்தை, பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன் கேட்டதற்கு, கருணாநிதி தெளிவுபடுத்தவில்லை. 

விளம்பர உத்தி: தமிழ்ப்புத்தாண்டை மாற்ற எடுத்த நடவடிக்கை தமிழை வளர்க்கவோ, தமிழுக்குச் சிறப்பு சேர்க்கவோ எடுத்த நடவடிக்கை என, எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இது போன்ற நடவடிக்கை வியாபார, விளம்பர உத்தி. கருணாநிதி சொல்வதைப் போன்று, தமிழ் அறிஞர்கள் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தால், அண்ணாத்துரை நிறைவேற்றி இருப்பார்; ஏன் கருணாநிதி கூட நிறைவேற்றி இருப்பார். தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் மீது தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம். அதை தமிழர்கள் விரும்பவில்லை; எனவே அதை தமிழக அரசு மாற்றியது, என்றார். 


‘பழைய கதை - மறந்துபோமோ? ’ என்ற தலைப்பிலான கடித அறிக்கை...
கருணாநிதியின் கருத்து:
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


‘பழைய கதை - மறந்துபோமோ? ’ என்ற தலைப்பிலான கடித அறிக்கை...

உடன்பிறப்பே, 
அரசியலுக்காகவும் - சுய விளம்பரத்துக்காகவும் நான் தமிழ்ப் புத்தாண்டை மாற்றியதாக - தமிழறிஞர்களுக்கு விருது வழங்கிய விழாவில் என்னைப் பற்றிய அர்ச்சனையைத்தான் ஜெயலலிதா முழு நேரமும் பாடியிருக்கிறார். தை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதைச் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று ஜெயலலிதா மாற்றியிருக்கிறார். அதற்கு என்ன ஆதாரம் சொல்லியிருக்கிறார் என்றால், “சித்திரையே வா! நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு இருக்கிற காரணத்தால் சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என தெய்வத்திரு மதுரை ஆதினம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்” என்று ஜெயலலிதா பேசியிருக்கிறார். மதுரை ஆதினம் குறிப்பிட்டு விட்டாராம்! எப்படிப்பட்ட ஆதாரம்? 

சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு இதுதான் ஆதாரமா? மேலும் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க நாள் என்று நானே கடந்த காலத்தில் கூறியிருக்கிறேன் என்பதை ஜெயலலிதா ஆதாரமாகச் சொல்கிறார். தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று தி.மு.கழக ஆட்சியில் 2008ஆம் ஆண்டு அறிவித்து அதனைச் சட்டமாக ஆக்கும் வரை - சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாக அதிகாரப் பூர்வமாகக் கருதப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் சித்திரைத் திருநாள் தானே தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில் அப்படித்தானே அழைத்திருக்க முடியும்! “தை மாதம் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகச் சட்டத்தின் மூலம் மாற்றி அமைத்தார் கருணாநிதி. யார் கேட்டது இந்தச் சட்டத்தை? இந்தச் சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்?” என்று ஜெயலலிதா பேசி யிருக்கிறார். 

தை திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மாற்றி ஜெயலலிதா வந்ததும் வராததுமாக சித்திரைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் கொண்டு வந்தாரே, அவரிடம் யார் கேட்டது இந்தச் சட்டம் வேண்டும் என்று? அவர் மாற்றிய சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்? என்று நாம் திருப்பிக் கேட்க முடியாதா? சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் அரசு விழாக்களுக்குத்தான் வழங்கப்படும். கட்சி நிகழ்ச்சிகளுக்குத் தரப்பட மாட்டாது. நடைபெற்றதோ அரசு விழா. 13ஆம் தேதி அங்கே நடைபெற்ற விழாவில் ஜெயலலிதா என்னென்ன பேசியிருக்கிறார்? அரசு விழாவில் பேசியதெல்லாம் எனக்காக செய்யப்பட்ட அர்ச்சனைகள்தான்! முதலமைச்சர் என்றால் அதுவும் ஜெயலலிதா என்றால் எங்கே வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் பேசலாமா? தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதுரையிலும், தஞ்சையிலும் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினார்களாம்! ஜெயலலிதா கூறியிருக்கிறார். தி.மு.கழக ஆட்சியில் சென்னையிலும், கோவையிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடு தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அல்லவா? கோவை மாநாட்டிற்குப் பெயரே தமிழ்ச் செம்மொழி மாநாடுதானே? தஞ்சையில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நடத்திய உலகத் தமிழ் மாநாட்டின் லட்சணம் என்ன என்பது தமிழர்களுக்குத் தெரியாதா? அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளிநாட்டுத் தமிழறிஞர்கள், கா.சிவத்தம்பி உட்பட எந்த அளவிற்கு அவமானப்படுத்தப் பட்டார்கள்? மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் திருப்பி அனுப்பப்பட்டார்கள். 

23-8-2011 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பேசும்போதே, ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டைத் தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது” என்று கடுமையாகச் சாடியிருக்கிறார். பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா ஆதாரப் பூர்வமாக பேசுவதாக எண்ணிக் கொண்டு, “சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்மாதத்தின் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராகும். உதாரணமாக, சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் சித்திரை ஆகும். இதே போன்று வைகாசி மாதம் பௌர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி ஆகும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அடிப்படையிலேயே பெயர்கள் வைக்கப்பட்டன” என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவின் பேச்சு எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பார்க்கலாம்! தை மாதத்தில் பௌர்ணமி “பூசம்” நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்குப் பூசம் என்ற பெயர் உள்ளதா? மாசி மாதத்தில் பௌர்ணமி “மகம்” நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்கு மகம் என்று பெயர் இல்லையே? பங்குனி மாதத்தில் பௌர்ணமி “உத்திரம்” நட்சத்திரத்தில்தான் வரும். 

அந்த மாதத்திற்கு உத்திரம் என்று பெயர் இல்லை. 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லையே; இதற்கெல்லாம் முதலமைச்சர் நாளை சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் அறிக்கை படிப்பார் என்று நம்புவோமாக! சென்னைப் பல்கலைக் கழகத்தால் 1912ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பேரகராதியில் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். ஆனால் அவரே கூறியபடி அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் - முதலமைச்சர் ஜெயலலிதா புரவலராக இருந்த நேரத்தில் - வெளியிடப்பட்ட “வாழ்வியற் களஞ்சியம்” - தொகுதி 13 - பக்கம் 43இல் “ஆடிப்பட்டத்தில் தேடி விதைத்து உழைத்து உணவுப் பொருள்களைத் திரட்டிய மக்கள் உத்தராயணம் தொடக்கமுறும் தைத் திங்கள் முதல் நாளன்று நன்றியுணர்வுடன் மழைக்கும் வேளாண்மைப் பெருக்கத்திற்கும் காரணமான சூரியனை வழிபடுகின்றனர். “சங்கிராந்தி”யன்று கடவுளுக்குச் சிறப்பான வழிபாடுகள், விழாக்கள் ஆகியன செய்ய வேண்டுமென்று பிருகுசங்கிதை என்னும் நூல் கூறுகின்றது. ஒரு “தேவநாள்” என்பது ஒரு மானிட ஆண்டு என்றும், அத்தேவநாளின் பகற்பொழுதின் தொடக்கமே தை முதல் நாள் என்றும் அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படுகின்றது என்றும் ஆகமங் களிலிருந்து அறிய முடிகின்றது.” என்று கூறப்பட்டிருக்கிறது என்பதை அம்மையாருக்கு மிகவும் பிடித்த ஆகம உதாரணத்திலிருந்தே குறிப்பிட்டுக் காட்டுகிறேன். 2004ஆம் ஆண்டு, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து, அவரே அணிந்துரையும் வழங்கியுள்ள “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி” - நான்காம் மடலம் - மூன்றாம் பாகம் - 111வது பக்கத்தில் “தை” என்பதற்கு பொருள் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு பேச்சு தயாரித்துக் கொடுத்தவர்கள் அந்த நூலையாவது வாங்கி அம்மையாரிடம் காட்டியிருக்கலாம் அல்லது அவர்களே படித்துப் பார்த்திருக்கலாம். அந்த நூலில் தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின் தொடக்க மாதம்” (first month of Tamil era); திருவள்ளுவராண்டின் தொடக்க மாதம் என்றுள்ளது. மேலும் அங்கேயே இச் “சுறவ” மாதமே தமிழாண்டின் தொடக்கம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது. அதுபோலவே “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி” - மூன்றாம் மடலம் - இரண்டாம் பாகம் நூலும் அம்மையாரின் அணிந்துரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. அங்கேயும் சித்திரை என்பதற்குப் பொருளாக தமிழாண்டின் முதல் மாதமாகக் கருதப்படும் “மேழம்” என்று கூறிவிட்டு - “சுறவமே” தமிழாண்டின் தொடக்கம்; மேழத்தைக் கொள்வது பொருத்தமன்று என்று எழுதியுள்ளார்கள். சுறவம் என்றால் தை மாதம்; மேழம் என்றால் சித்திரை மாதமாகும். மேலும் ஜெயலலிதா பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பேசும்போது, “1935ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில், “திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்பது எளிதிற் பெறப்படும். கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்” என மறைமலை அடிகளார் கூறியதாக ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில் சிறுவை நச்சினார்க்கினியன் கூறியிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அல்ல, 31 ஆண்டுகளுக்கு முன்புதான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதுதான் மறைமலை அடிகளாரின் கருத்துமாகும். அந்தக் கருத்தைத் தான் அரசு ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருகின்றது. இதைத்தான் மறைமலை அடிகளாரின் மகனும், மறைமலையடிகள் வரலாற்றினை நமக்குத் தொகுத்து வழங்கியவருமான மறை. திருநாவுக்கரசு, “மறைமலை அடிகளின் கருத்துப்படி திருவள்ளுவர் கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் முற்பட்டவர்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அது மாத்திரமல்ல; அம்மையார் குறிப்பிட்டுள்ள 1981ஆம் ஆண்டு மதுரையில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முன்னின்று நடத்திய ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டினையொட்டிய மலரினை என் வீட்டிலே உள்ள நூலகத்திலிருந்து தேடிப்பிடித்து சிறுவை நச்சினார்க்கினியன் எழுதிய கட்டுரை 407ஆம் பக்கத்தில் வந்ததை முழுவதும் படித்தேன். 

அதில் அம்மையார் குறிப்பிட்ட பகுதி 408ஆம் பக்கத்தில் இருந்தாலும், 407ஆம் பக்கத்திலே அவரே என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழகத்தின் நெடுநாளைய பழமொழி. சூரியன் சுற்றும் நிலையின் கணக்கினைக் கொண்டு, அந்நாளில் தை முதல் ஆனி ஈறாக ஒரு பகுதியும் ஆடி முதல் மார்கழி ஈறாக மற்றொரு பகுதியும் விளங்கின. ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலம் இருள் நிலை கொண்டது. தை முதல் ஆனி ஈறாகக் கொண்ட காலம் பகல் நிலை கொண்டது. ஆண்டின் இரவுக் காலமாகிய ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலத்தில் - அதாவது ஆடிக் காற்றிலும், அடுத்துள்ள ஐப்பசி மழையிலும், மார்கழிப் பனியிலும் குளிரிலும் இடர்ப்படும்பொழுது மக்கள் உள்ளத்தில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை ஒலி பேரொலியாய்க் கேட்கிறது. இந்த இரவு நிலை மாறிப் பகல்நிலை பெற்றுப் பயன் தரும் தைப் பிறப்பு நாளைப் புத்தாண்டின் புனித நாளாய், பிறப்பு நாளாய்ப் பழந்தமிழர் கொண்டாடி வந்தனர். இன்றுங்கூட, தைப் பிறப்பைத் தனிப் பெருஞ்சிறப்பாகத் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆகவே நாம் தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்துவோம்’’ - என்று அவரே எழுதியிருப்பதை அம்மை யாருக்குப் பேச்சு எழுதிக் கொடுத்தவர்கள் பார்க்க மறந்து விட்டார்களா? அல்லது பார்த்து விட்டு அம்மையார் மாட்டிக் கொண்டு விழிக்கட்டும் என்று மறைத்து விட்டார்களா? 

திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால் - தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திட கழக அரசு முடிவு செய்துள்ளது என்று 23-1-2008 அன்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. 1-2- 2008 அன்று சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதேநிலை தொடருமேயானால் தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை எப்படி கொடுக்கலாம்? அது கருணாநிதி செய்து கொண்ட சுய விளம்பரம், அரசியலுக்காகச் செய்து கொண்ட ஏற்பாடு என்று சொன்னாலும் சொல்லக் கூடும். ஏனென்றால் செம்மொழி என்றாலே, அம்மையாருக்கு அவ்வளவு பாசம்! எட்டிக்காய் தின்றது போல! ஆட்சிக்கு வந்த முதல் நாள் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தையே தூக்கி வெளியிலே போட்டவர் ஜெயலலலிதா. இன்றளவும் அந்த நூலகத்திற்கு இடம் கொடுத்தபாடில்லை. சென்னைத் தீவுத் திடலில் 6.3.2006 அன்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சோனியாகாந்தி, ‘மத்தியிலே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்பட்டவுடன் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்திருக்கிறோம். அதன்மூலம் வரலாற்றுப் புகழ்மிக்க தமிழ்மொழிக்கு பாரம்பரியமும் கலாச்சாரப் பெருமையும் தரக்கூடிய மிகப்பெரிய தகுதியினை இந்திய அரசு தந்திருக்கிறது. தமிழ் மொழியைச் செம்மொழியாக்கிய அந்த வரலாற்றுச் சாதனையின் முழுப் பெருமையும் பங்கும் கருணாநிதியே சாரும். தமிழைச் செம்மொழியாக்குவதில் அவரது பங்கு மகத்தான ஒன்று என்பதை இந்த மேடையிலே நான் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்’ - என்று பாராட்டினார். இப்படியெல்லாம் இவனுக்குப் பாராட்டுக் கிடைக்கலாமா என்ற வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் தேடித் தேடிப் பார்த்து கழக ஆட்சியில் நம்மால் செய்யப்பட்ட சாதனைகளையெல்லாம் மாற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டுள்ளார். அதிலே ஒன்றுதான் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நாளை மாற்றுகின்ற செயலாகும். சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா? 

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா? என்ற கேள்வியை எழுப்பி, “நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையல்ல உனக்குப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே அறிவுக்கொவ்வாத அறுபதாண்டுக் கணக்கு தரணியாண்ட தமிழருக்குத் தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்று பாட்டிலே பாடி வைத்த பாவேந்தர் பாரதிதாசன், என்னுடைய சுய விளம்பரத்திற்காக அவர் பாடியதா இக்கவிதை! தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில், அ.தி.மு.க. அரசு திருவள்ளுவர் ஆண்டினை என்ன செய்யப் போகிறது? தி.மு.கழக ஆட்சியில்தான் 1969இல் திருவள்ளுவர் ஆண்டு ஈராயிரம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. 1972இல் கழக ஆட்சியில் நடைபெற்றபோதுதான் திருவள்ளுவர் ஆண்டு என்பதை ஏற்று, அரசு இனிமேல் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் மற்றும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. ஏன் இன்றளவும் கழக நாளிதழ் “முரசொலி”யின் முகப்பில் “திருவள்ளுவர் ஆண்டு 2043” என்றுதான் எழுதப்பட்டுள்ளது. எனவே திருவள்ளுவர் ஆண்டு தொடங்கும் தை முதல் நாள்தான் தமிழர்க்குப் புத்தாண்டு நாள். மலேசியா நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் தை முதல் நாளையே தங்களது புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார், “முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. 

தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடி னார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தி வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனதிலும் புதுமை, புதிய பச்சரிசியைப் பொங்குவார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்” - என்று விளக்கியிருக்கிறார். முதலமைச்சர் ஜெயலலிதா தன் பேச்சுக்கு ஆதாரமாக விஞ்ஞான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு, சித்திரை மாதம் வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அதற்கு விடையளிப்பது போல, சௌதி மன்னர் பல்கலைக் கழக லேசர் துறை பேராசிரியர் விஞ்ஞானி டாக்டர் வ. மாசிலாமணி “தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்ற தலைப்பில் எழுதியுள்ள நீண்டதொரு கட்டுரையில், 

“ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகச் சூழலில், கிராமத்து வானியல் விஞ்ஞானிகளின் கணக்குப்படி தைத் திங்கள் வையத்திற்கு எல்லாம் புத்துணர்வு கிட்டும் மாதம் என்று சரியாகவே கணக்கிட்டிருக்கிறார்கள். அதனால்தான் மார்கழி கடைசி நாள் பழையனவும், சோம்பலும் கழியும் போகியாகவும் தை முதல் நாளை சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கலாகவும் கொண்டாடியிருக்கிறார்கள். ...... 

சூரியன் தென்கோடி சென்று நின்று திரும்பி நம்மையெல்லாம் நோக்கும் நாள்தான் உலக உயிர்கள் புத்துணர்ச்சி பெறும் நாள். அந்த நாள் ஜனவரி 14. அந்த நாளைக் கொண்டு துவங்குவது தான் வானியல் வழியான சரியான ஆண்டுத் துவக்கம். ஜனவரி 14க்கு அதாவது தை முதல் நாளுக்கு இத்துணை சிறப்பு இருக்கிறது. இந்தக் கட்டுரை படிக்கும் விஞ்ஞான ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள். “இணையம்” போய் perhelion என்று தட்டுங்கள். கட்டாயம் புத்தாண்டுக்கு தைத் திங்களே பொருத்தம் என்பீர்கள்” -என்று விளக்கியிருக்கிறார். எனவே தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் துவக்கம் என்பதை மாற்றி சித்திரை என்று ஜெயலலிதா அறிவித்துள்ள செயல் வழக்கம் போலவே அவருடைய காழ்ப்புணர்ச்சி, கழக அரசு நடைமுறைப் படுத்திய செயல்களுக்கெல்லாம் ஊறு தேட முற்படுகின்ற சூழ்ச்சிகளிலே ஒன்றே தவிர வேறல்ல! தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்கள் முதல் நாள் என்று நான் சுய விளம்பரத்திற்காகச் செய்தேனா? அல்லது அதை மாற்றி சித்திரைத் திங்கள் என்று தற்போது அறிவிக்கும் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சுய விளம்பரத்திற்காகச் செய்கிறாரா என்பதை; பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தை என்று மில்லாமல் இப்போது புதிதாக தி.மு.க.வினரையும் முன்னாள் முதலமைச்சரையும் ஏசிப் பேசி அரசியலுக்காகப் பயன்படுத்தியுள்ள அநாகரிகச் செயல் குறித்து ஜெயலலிதாவின் கும்பல்தான் விளக்க வேண்டும்! 

அன்புள்ள, 

மு.க. 

தமிழ் ஆர்வலர்களின் கருத்து: 

தமிழ் ஆண்டு (திருவள்ளுவராண்டு) 

க.தில்லைக்குமரன் 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
http://siragu.com/?p=1574


காலத்தின் அருமை 

நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர். ’நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும் வாளது உணர்வார்ப் பெறின்’ என்கிற குறள் மூலமும், காலம் அறிதல் என்கிற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையை வள்ளுவம் உணர்த்துகிறது. நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 

60 நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று 6 சிறு பொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று 6 பெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர். காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைப் பொதுவான ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது, வருத்தம் தருகிறது. 

இன்றைய நிலை 

இன்னாளில் வழக்கில் உள்ள ‘பிரபவ முதல் அட்சய’ வரை உள்ள 60 ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாகவும் இல்லை, பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழினத்தின் காலத்தை வரையறுக்கவும் முடியவில்லை. இந்த இழிநிலையைப் போக்கத் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள். 

அவர்கள் எடுத்த முடிவுகள் திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042) என்று அந்நாளில் முடிவு செய்தனர். கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; புதன் = அறிவன்; சனி = காரி. தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. மேற்கண்ட விவரங்கள் மறைமலை நகரில் வாழ்ந்து வரும் திரு வ. வேம்பையன் அவர்களின் கட்டுரையிலிருந்து எடுத்தது. கடந்த 30 ஆண்டுகளாக இவர் திருவள்ளுவராண்டைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கடும் முயற்சி எடுத்துவருகிறார். 1967 இல் ஆட்சிக்கு வந்தபோதோ அல்லது 1971 இல் பெரும் வெற்றி பெற்றபோதோ முழு வீச்சில் அரசு சட்டத்துடன் நடைமுறைப்படுத்தி இருந்தால் கடந்த 40 ஆண்டுகளில் நாம் வெற்றி பெற்றிருப்போம். ஒன்று தமிழாண்டு திருவள்ளுவராண்டு யாராலும் மாற்ற முடியாத படி (எப்படி இன்று ‘தமிழ்நாடு’ என்ற பெயரை யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாதோ) வழக்கத்தில் வந்து நிலைத்து இருக்கும். 

என் கருத்து அறிஞர்களும் சான்றோர்களும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்தாலும் ஒரு சாரார் இதை மறுத்து வழக்கமான சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகப் பாவித்து வருகிறார்கள். இவர்கள் தமிழ் ஆண்டுகள் என்கிற பெயரில் வழங்கி வரும் வடமொழிப் பெயர்களையும் ஏற்றுக் கொண்டு வருவது வருத்தத்தைத் தருகிறது. தமிழருக்கென ஒரு தொடராண்டு கொண்டுவருவதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தமிழ் முதல் திங்கள் ’தை’யா அல்லது ’சித்திரை’யா என்பதுதான் குழப்பம். தமிழ்ப் பேசும் அனைத்து தரப்பினருக்கும் வடமொழிப் பெயரை மாற்றுவதிலும் மாற்றுக் கருத்தேதுமிருக்க வாய்ப்பில்லை. 

திருவள்ளுவரின் காலத்தை கி.மு.31 என்று கணித்ததில்தான் குழப்பம் வருகிறது. திருவள்ளுவர் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்ததற்கு வாய்ப்பில்லை என்று மேலை நாட்டுத் தமிழறிஞர்கள் நிலை நாட்டுகிறார்கள். அதில் முக்கியமானவர் செக்கோசுலேவியாவில் பிறந்த பெரும் தமிழறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் அவர்களாவார். இவர் மொழியின் அடிப்படையில் தமிழ் நூல்களின் காலத்தை ஆய்ந்து திருக்குறள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ‘The Smile of Murugan on Tamil Literature of South Indiaஎன்கிற நூலில் நிறுவியுள்ளார். அவர் ஏன் அப்படி கூறுகிறார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.


திருக்குறளின் காலம் 

தமிழர்களின் புனித நூலான திருக்குறளின் காலத்தைக் கணிப்பது மிகக்கடினமானதும், சர்ச்சைக்குரியதுமாகும். குறள் சங்கக் காலத்தைச் சேர்ந்தது இல்லை என்பது தமிழாய்ந்த அறிஞர்கள் முடிபு. குறளின் மொழி, முந்தைய நூல்களின் மேற்கோள் காட்டல், வட மொழிச் சொற்களின் பயன்பாடு, சமண மதத்தின் தாக்கம் ஆகியவைகளை வைத்துப் பார்க்கையில் திருக்குறள் சங்கக்காலத்திற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று உணரலாம். திருக்குறளின் மொழியையும் இலக்கணத்தையும் பார்க்கையில் அந்நாளில் மொழி வளர்ந்த நிலையை அடைந்திருக்கும் நிலையை அறியலாம். அதனால் அந்நூல் கி.பி.400-கி.பி.500 ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தெளியலாம். குறள், திரு. சோமசுந்தர பாரதியார் (திருவள்ளுவர்), திரு இராசமாணிக்கனார் (தமிழ் மொழி வரலாறு) போன்றோர் கூறுவது போல் திருக்குறள் காலம் கி.மு.30-ம் அல்ல. திரு. வையாபுரிப் பிள்ளை (இலக்கிய மணி மாலை) கூறுவது போல் கி.பி.6-ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தியதும் அல்ல.


சங்க இலக்கியங்களில் இல்லாத புதிய இலக்கண முறைகளை முதன் முதலாகத் திருக்குறளில் காண்கிறோம். பன்மையை இறுதியில் குறிக்கும் ‘கள்’, உயர்திணையையும், அஃறிணையையும் குறிக்கும் பெயர்ச்சொற்கலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது (263-மற்றையவர்கள், 919-பூரியர்கள்), நிபந்தனை விகுதியான (Conditional Suffix) ‘ஏல்’ (368-உண்டேல், 655-செய்வானேல், 556-இன்றேல்), எதிர்மறை (Negative) உருபு (101,103-செய்யாமல், 1024-சூழாமல்). இது போன்ற புதிய சொற்களின் பயன்பாட்டால் திருக்குறளைச் சங்க இலக்கியங்களுள் ஒன்றாகக் கருத முடியாது.
மேலும் திருக்குறளில் சங்க இலக்கியங்களைக் காட்டிலும் அதிகமான வடமொழிச் சொற்களை காணலாம். சுவலபில் அவர்கள் திருக்குறளில்
102 சொற்கள் வட மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அமரர் (121), அமிழ்தம் (11), ஆகுலம் (34), ஆசாரம் (1075), ஆதி (1), ஏமம் (306), கனம் (29), காமன் (1197), சிவிகை (37), தேவர் (1073) போன்ற பல வட மொழிச் சொற்கள் திருக்குறளிலுள்ளன. சுவலபில் எழுதிய ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற புத்தகத்தின் 170,171-ஆம் பக்கங்களில் குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து வட மொழிச் சொற்களையும் பார்க்கலாம். ’பிறவிப் பெருங்கடல்’ எனும் சொல்லாட்சி வட மொழி நூலான ‘சம்சாரசாகரா’ எனும் நூலிலிருந்து எடுத்தது போலுள்ளது. சில குறள்கள் வடமொழி நூலான  ‘மானவதர்மச்சாத்திரம்’ நூலிலிருந்து முழுமையாக எடுத்துக் கையாண்டது போலுள்ளன. எடுத்துக்காட்டாக,  குறள் 43 — மானவ.III.72, குறள் 54 – மானவ.IX.12, குறள் 58 – மானவ. V.155 (Smile of Murugan, page 171). பெரு அளவிலான வட மொழிச் சொற்களை திருவள்ளுவர் பயன்படுத்தி இருப்பதால் அவர், சங்கக் காலத்திற்குப்பின்புதான் வாழ்ந்திருக்கக்கூடும். எனவே திருக்குறளின் காலம் கி.பி. 400-450 என்று கணிக்கலாம்.
வள்ளுவர் வட மொழிச் சொற்கள் அதிகம் பயன்படுத்தியிருந்தாலும் வட மொழி நூல்களின் சில கருத்துக்களை கையாண்டிருப்பதாலும், அவர் வட மொழி நன்கறிந்தவர் என்பது தெளிவு. சில வட மொழிச் சொல்லாக்கங்களை அவர் பயன்படுத்தியிருந்தாலும் பெரும்பாலான சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே. அவரது படைப்பில் பெரும்பாலானவை வடமொழி-வடவர் பண்பாட்டிற்கும் முந்திய சங்கத் தமிழரின் பண்பாட்டையேக் காட்டுகின்றன. இன்பம் (அகம்) என்பது தமிழருக்கே உரிய ஒரு இலக்கிய நடை. இதற்கு ’இன்பத்துப் பால்’ என்கிற ஒரு பெரும் பகுதியையே அவர் எழுதியதிலிருந்து அவர் வடவர் பண்பாடும், தமிழர் பண்பாடும் அறிந்த மூதறிஞர் எனலாம்.
மீண்டும் திருவள்ளுவராண்டு விவாதத்திற்கு வருவோம். திருவள்ளுவர் காலத்தைத் தவிர 1921-ல் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில் தமிழ்ச் சான்றோர்கள் எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடே. தமிழுக்கென ஒரு தொடராண்டு வேண்டும் என்கிற அப்பெரியோர்கள் கருத்தில் நான் உடன்படுகிறேன். வட மொழிக்கிணையான தமிழுக்குத் தமிழில் பெயரில்லாமல் வட மொழியில் பெயரிட்டு அதுவும் 60 ஆண்டு சுழற்சி முறையில் வழங்கி வருவது தமிழுக்கும் தமிழருக்கும் இழிவு. இதைப் போக்கத் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது சிறப்பானதே. திருவள்ளுவரின் காலத்தில் நமக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் திருக்குறளுக்கு மதிப்பளித்து திருவள்ளுவர் பெயரில் ஆண்டை நடை முறைப்படுத்துவதும் ஏற்கத்தக்கதே. அப்படி இதில் உடன்பாடு இல்லாவிட்டால் தமிழாண்டு என்று குறிப்பிட்டுத் தொடராண்டை வழங்கலாம்.
தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல்நாள், பொங்கல் நன்னாள்
-பாவேந்தர் பாரதிதாசன்.

தமிழ்ப்புத்தாண்டு

சுப.நற்குணன்,மலேசியா. 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு 

தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. 

சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர். மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். 

இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள். கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது. 

 உரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். 

சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது. அதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. 

இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 

128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை. அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். 

அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. தமிழர் கண்ட கால அளவீடு பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. 

பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை. திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள். பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். 

இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும். சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது. 

சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி"எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. 

"திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம். மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும். 

இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர். "கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல்) காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். 

அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது. தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும். 

பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். 

தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது. இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர்.

இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர். சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன. 

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:- 1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை 2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை 3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு 4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு 5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன. 

இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். 

அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே. இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. 

 'பத்தன்று நூறன்று பன்னூ றன்று பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்'' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது. தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும். 

 சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. 

இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது. அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் 

"'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார். அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார். ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். 

ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார். 'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? என வேண்டி நின்றார். பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார். அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது. 

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும். பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக, 

இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.


எதுதான் தமிழ்ப்புத்தாண்டு? 

ஆசிரியர் குழு - வரலாறு.காம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாசகர்களுக்கு வணக்கம்.

சென்ற மாதத் தலையங்கத்தை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.'தையோ, சித்திரையோ, புத்தாண்டைக் கொண்டாட விரும்புபவர்கள் அரசின் ஆணைக்காக இல்லாமல், அவரவர் மனசாட்சிப்படி எது சரியென்று படுகிறதோ, அதைக் கொண்டாடுவதுதான் சரி. அரசு ஆணையிட்டது என்பதற்காக ஒரு வருடம் யோசிக்காமல் தையில் கொண்டாடிவிட்டு, அடுத்த அரசு அதை மாற்றும்போது மீண்டும் யோசிக்காமல் சித்திரையில் கொண்டாடுவதுதான் தவறு'என்பதுதான் தலையங்கத்தின் உட்கருத்து. இதைச் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால் எதிர்ப்பிற்கு இடமிருந்திருக்காது.

கடந்த இதழ் வெளியான பின்பு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் எங்களிடமிருந்து உடனடி மறுமொழி வராததால் 'நாங்கள் கள்ள மௌனம் சாதித்ததாக'க் குற்றம் சாட்டினார்கள். அவர்களுக்கு, மாத இதழுக்கும் Blogக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறோம். வரலாறு.காம் என்பது குறிப்பிட்ட அளவு கட்டுரைகள் சேர்ந்த பிறகு ஏறத்தாழ ஒரு மாத கால இடைவெளியில் வெளியிடப்படும் மின்னிதழ்; தினந்தோறும் பதிவேற்றப்படும் வலைத்தளம் அல்ல. கட்டுரைகள் கிடைப்பதைப் பொறுத்து இந்த ஒரு மாதம் என்பது சற்று அதிகமாகவும் ஆகலாம். எனவே, இந்தத் தாமதத்திற்குப் பொருள், எங்கள் நிலையைத் தெளிவுபடுத்த எங்களால் முடியவில்லை என்பதன்று.

தமிழ்க்கடல் மறைமலையடிகள், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற ஆய்வுநெறி அறிந்த புலமைமிக்க அறிஞர்கள் ஒரு கருத்தை வலியுறுத்தி இருக்கும்போது நிச்சயம் அவர்கள் தகுந்த பின்புலம் இல்லாமல் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது எங்கள் நம்பிக்கை. வரலாற்றை எழுதும்போது உணர்ச்சிவயப்படாமல் எழுதுவதே முறை. வரலாறு.காம் அதில் இயன்றவரை கவனமாகவே இருக்க முயல்கிறது என்றாலும், அதையும் மீறிச் சில சொற்கள் உணர்ச்சி மிகுதியாய் எப்போதேனும் வந்து விழுந்துவிடுகின்றன. அப்படி வந்து விழுந்த சொற்கள்தான் சென்ற தலையங்கத்தின் 'மானமும் அறிவும்' போன்றவை. அந்தச் சொற்களால் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் பொறுத்தாற்றிக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

மறைமலை அடிகள் தலைமையில் புத்தாண்டு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் வெளிவந்த நாளிதழ்கள் மற்றும் மாத இதழ்களை மறைமலையடிகள் நூலகம், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற இடங்களில் கடந்த ஒருமாத காலமாகத் தேடிப்பார்த்தாலும், இதுபற்றிய செய்திகளை இதுவரை காணக்கூடவில்லை. எனவே, இன்னும் தேடல் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இதுவரை கிடைக்காத நிலையில், எப்போது தமிழ்ப் புத்தாண்டு என்று நாமே மூலத்தரவுகளில் இருந்து ஆய்ந்தறிந்தால் என்ன என்ற எண்ணம் துளிர்விட்டது. தேடலின் முடிவில், சித்திரையில் தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை; தையில் தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வதற்கும் எந்தச் சான்றும் இல்லை என்பது தெளிவானது. அது மட்டுமல்ல, 'சங்ககாலத்தில் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடியதற்கே சான்றில்லை' என்றும் அறிந்தோம். சித்திரையில்தான் புத்தாண்டு என்று கூறுபவர்கள் வைக்கும் தரவுகளைச் சீர்துக்கிப் பார்த்தபோது கேள்விகளே மிஞ்சி நின்றன.

'சங்க இலக்கியங்களில் 'தைந்நீராடல்' எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.' - திரு. எஸ். இராமச்சந்திரன் -'சித்திரையில்தான் புத்தாண்டு'.

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வுதான் (உத்தராயனத் தொடக்கம்) புத்தாண்டு தொடங்குகிறது என்பதற்கு அறிகுறி என்று கூறுவதை மனதில் நிறுத்திக் கொள்வோம். தை முதல்தேதி அன்று நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்பு இல்லை. சரி. இந்த நிகழ்வு சித்திரை முதல்தேதி நிகழ்கிறது என்பதற்கான இலக்கியச் சான்றுகள் எவை?

'மகாபாரதம் நிகழ்ந்த காலமாகக் கருதப்படும் கி.மு. 1300ஆம் ஆண்டிலிருந்து, மகாபாரதம் எழுத்து வடிவம் பெற்ற கிறிஸ்து சகாப்தத் தொடக்க நூற்றாண்டு வரையிலும்' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

மகாபாரதத்தின் காலத்தை கி.மு 1300ம் ஆண்டு என்று கூறுவது எப்படி? தமிழ் ஹிந்து தளம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று கூறுகிறதே? (பார்க்க: http://www.tamilhindu.com/2009/08/kannan_for_all_time/) எது உண்மை?

'மேலை நாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது.'
'"உறையூர்ப் பங்குனி முயக்கம்" என்றும் "கொங்கர் மணி அரை யாத்து மறுகின் ஆடும் உள்ளிவிழவு" என்றும் குறிப்பிடப்படும் விழா, பங்குனி மாதப் பூர்ணிமை நாளான உத்தர பல்குன நட்சத்திரத்தன்று நடைபெற்ற ஹோலி விழாவே ஆகும். இவ்விழா பங்குனி மாத இறுதி நாளில் கொண்டாடப்பட்டது. வேனில் காலத்தை வரவேற்கின்ற விழாவாக இது அமைந்தது எனத் தெரிகின்றது.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.


மேலை நாடுகளில் சரி! உறைய வைக்காத குளிரைக்கொண்ட தமிழ்நாட்டில் வெயில் காலம் ஏன் வரவேற்கப்பட்டது? பங்குனி முயக்கமும் உள்ளிவிழவும் வடநாட்டுப் பண்டிகையான 'ஹோலி'யுடன் தொடர்புபடுத்தப்படுவது எதன் அடிப்படையில்? காமன் பண்டிகைக்கும் இந்திரவிழாவுக்கும் என்ன தொடர்பு? மேலும் இந்திரவிழாவுக்கும் புத்தாண்டுக்கும் என்ன தொடர்பு? 'மீனமேஷம் பார்த்தல்' என்பதைச் சான்றாகக் கொள்ள வேண்டுமானால், 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பேச்சு வழக்கையும் ஆதாரமாகக் கொள்ளலாமா?

'ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஆங்கிலேய சகாப்தம் - சொல்லப் போனால் கிறிஸ்துவ யுகம் - அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

இது கட்டுரையாளருக்குத் 'தோன்றியிருக்கிறது'. அவ்வளவே. முடிந்த முடிவாகச் சொல்லவில்லை. நேரடியான ஆதாரங்களையும் காட்டவில்லை. சாந்திரமான மற்றும் சௌரமான முறைகளைக் குழப்பங்கள் என்று சொல்லிவிட்டு, கிரேக்க, ரோமானிய, ஜொராஸ்ட்ரியக் காலக்கணக்கீடுகளை இந்தியச் சோதிட அறிவியலின் (உண்மையிலேயே இது அறிவியலா என்பது வேறு விஷயம். பார்க்க : நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி முனைவர். வெங்கட்ராமன் அவர்களின் கூற்று.http://www.dinamalar.com/News_Detail.asp?Id=375826) சாந்திரமான முறையின் பூர்ணிமாந்தக் கணக்கீட்டுடன் இணைத்திருப்பது ஏன்? இது ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துவருகிற வகையில் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவா?

'பூர்ணிமாந்த முறை (பெளர்ணமியை ஒரு மாதத்தின் முடிவாகக் கொள்ளும் முறை)'
'இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது.'
'பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளை இக் கட்டுரையில் முன்னரே பரிசீலித்தோம். இச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.


இந்திரவிழா தொடர்பான மேற்கண்ட மூன்று வரிகளையும் படிப்போர்க்குக் குழப்பமே மிஞ்சும். பூர்ணிமை (பௌர்ணமி) + அந்தம் = பௌர்ணமியுடன் ஒரு மாதம் முடிகிறது. இதை இரண்டாவது சொற்றொடருடன் பொருத்திப் பார்க்கும்போது இந்திரவிழா சித்திரை மாதத்தின் கடைசி நாளில் நடைபெற்றதாக வருகிறது. இதன்மூலம் மூன்றாவது வரியில் இந்திரனுக்கு ஆண்டின் தொடக்கக் காலத்தில் விழா எடுத்திருப்பதால் பூர்ணிமாந்த முறையில் சித்திரையின் கடைசி நாள்தான் ஆண்டின் தொடக்கமா?

'பூர்ணிமாந்தக் காலக்கணக்கீட்டின் படியமைந்த, மார்கழி மாத இறுதி நாளன்று அதாவது தை முதல் தேதிக்கு முந்தைய நாளான மார்கழிப் பெளர்ணமியன்று பாவை நோன்பின் இறுதி நாளாகக் கருதப்பட்டு பலராமன் வழிபாடும் நிகழ்ந்திருக்க வேண்டும்.'
'போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிரப் பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று.'
'மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.'
'பக்தி இயக்கக் காலகட்டத்தில் மார்கழி நோன்பின் இறுதி நாளன்று அல்லது நோன்பு முடிகின்ற நாளை அடுத்துப் பால் சோற்றுப் பொங்கல் சமைத்து அதில் நெய்யைப் பெய்து உண்டு களித்தனர்.'
'பூம்புகாரில் இந்திர விழாவின் போது "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து" மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64-69களில் குறிப்பிடப்படுகிறது. விழுக்குடை மடை என்பது 'மாமிசம் விரவின சோறு' என்றும் பொங்கல் என்பது 'கள்ளு' என்றும் உரையாசிரியர்கள் பொருள் கண்டுள்ளனர். எனவே தைப் பொங்கல் விழா என்ற பெயர்கூட மதுப் பொங்கல் தொடர்பானதே; விவசாயக் கடவுளான பலராமனுக்குரிய வழிபாட்டு விழாவே என்பதும் தெளிவாகும். போகியை மார்கழி மாத இறுதி நாளன்று தனி விழாவாகவும் பொங்கலைத் தை முதல் நாளன்று தனி விழாவாகவும் கொண்டாடுவது மட்டும்தான் இன்று நாம் காணும் வெளிப்படையான வேறுபாடே தவிர இவை இரண்டும் ஒரே விழாவாகவே இருந்துள்ளன என்பது தெளிவான உண்மையாகும்.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.


போகிப்பண்டிகை என்பது பலராமனுக்கு உரியது. அது மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படுவது. பூம்புகாரில் இந்திரவிழாவின்போது (சித்திரை மாதக் கடைசிநாளில்) வைக்கப்பட்ட பொங்கலும் பலராமனுக்குரியதே. அப்படியெனில் இவை இரண்டும் எப்படி ஒரே விழாவாக இருந்திருக்க முடியும்? சிலப்பதிகாரக் காலத்தில் மார்கழிக்கு அடுத்துச் சித்திரை மாதம் வந்ததா? இரண்டு மாதங்களின் இறுதி நாட்கள் (பௌர்ணமிகள்) அடுத்தடுத்து வந்தனவா? அப்படியானால் சித்திரை மாதத்துக்கு ஒரே நாளா? மேலும், போகிப்பண்டிகை பலராமனுக்கு உரிய விழா என்பதற்கு என்ன சான்று?

'பிற்காலச் சோழராட்சியின் போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா என்ற கேள்விகள் தொடர்பான பிரச்சினையாகும். இவை இரண்டிற்குமே தெளிவான விடை "அல்ல" என்பதுதான்.'
'சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக் கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.'
'இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.


கட்டுரையின் தொடக்கத்தில் 'புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்புச் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை' என்று குறிப்பிடுபவர், சோழர் காலக் கல்வெட்டு உத்தராயனத் துவக்கம் தை முதல்நாள் என்று குறிப்பிடும்போது அதை ஏன் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்?

'சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப்பார்க்கத் தக்கது.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

சித்திரைப் புத்தாண்டையும் அப்பெருந்தகை முதன்மைப் படுத்தவில்லை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டாமா?

'பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.
'கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில்-முதுவேனில், கார்-கூதிர், முன்பனி-பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.


இந்த வரிசை தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தரும் வரிசையுடன் பொருந்தவில்லையே?

'காரும் மாலையும் முல்லை
குறிஞ்சி, கூதிர் யாமம் என்மனார் புலவர்
பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப
வைகறை விடியல் மருதம்
எற்பாடு, நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும்
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனிதானும் உரித்து என மொழிப
இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்
உரியது ஆகும் என்மனார் புலவர்' - தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணையியல் – (6-13)


இதில் கார்காலம்தானே முதலாவதாகக் குறிக்கப்படுகிறது? இது தொல்தமிழ் மரபில்லையா?

'60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை "வியாழ வட்டம்" (Jovian Circle) எனப்படும்.'
'இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.


பிறகு ஏன் ஒவ்வொரு சித்திரை முதல் தேதியிலும் ஒவ்வோர் ஆண்டு தொடங்குவதாகச் சோதிடம் கூறுகிறது? 1-1-2012 என்ற தேதிக்கும் 2012ம் ஆண்டுக்கும் எந்த அடிப்படைத் தொடர்பும் இல்லை என்று கூறுவதுபோல் இருக்கிறது.

'ஜோதிட அடிப்படையில் பார்க்கப்போனால் விஸ்வபுருஷனின் தலையாகக் கருதப்படும் மேஷ ராசியின் முதல் பாகையில் சூரியன் பிரவேசிக்கின்ற காலமே சித்திரை முதல் நாளாகும்.'
'"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்" என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் வரியாகும். மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள்.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.


இப்பாடலுக்குப் 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி'யில் தமிழரின் வானியல் அறிவைக்கூறும் 'வானக்கலை' என்ற தலைப்பில் டாக்டர். மா.இராசமாணிக்கனார் எழுதிய விளக்கம் : 'சந்திரன் தக்கனுடைய புதல்வியர் இருபத்தெழுவரை மணந்தான்; அவர்களுள் உரோகிணியிடம் மிகுந்த அன்பு செலுத்தினான்' என்பது புராணக்கதை. பாண்டிமாதேவியின் கட்டிலின் மேற்கூரையில் இராசிமண்டலம் வரையப்பட்டிருந்தது. சந்திரன், உரோகிணி உருவங்களும் வரையப்பட்டிருந்தன. ஆகாயத்திடத்தே திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசி முதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும் மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு திரியாமல் நின்ற உரோகிணி எழுதப்பட்டிருந்தது'.

இதில் புத்தாண்டு எங்கே வருகிறது?

மேடராசியைத் தலையாகக் கொண்டு சூரியன் சுற்றி வருவதாக இப்பாடல் கூறினாலும், சூரியனுக்கும் புத்தாண்டுக்கும் உள்ள தொடர்பை வகுத்தவர் யார்? சூரியன் ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் நுழைவதுதான் புத்தாண்டு என்று எப்படி எடுத்துக் கொள்வது? வானியல் என்பது வானில் உள்ள கோள்களின் இயக்கத்தை ஆராயும் இயல். மேற்கண்ட பாடல் தமிழர்களின் வானியல் அறிவுக்குச் சான்று. அவ்வளவே. அவ்வானவியல் கூறுகளின் பெயரால் பண்டிகைகளையும் பலன்களையும் கணிக்கும் சோதிடம் என்பது மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அறிவியல் விதிகளைப் போன்று சோதிட விதிகளைத் தெளிவாக வரையறை செய்து தொடர்ச்சியாக நிரூபிக்க முடியாது. வரலாற்று ஆய்வு என்று குறிப்பிடப்படும் ஒரு கட்டுரைக்கு அறிவியல் முறையில் நிரூபிக்க முடியாத சோதிடத்தை அடிப்படையாகக் கொள்வது ஆய்வுநெறியா?

மேட ராசி என்று நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்கள் குறிப்பிடுவதால் அது சித்திரைதான் என்கிறார்கள். உரையாசிரியர்கள் சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர். ஒருகாலத்தில் எழுதப்பட்ட ஒரு பாடலுக்குப் பல நூற்றாண்டுகள் கழித்து வந்தவர்கள் உரையெழுதியிருக்கிறார்கள். எனவே, பாடலை இயற்றியவர் சொல்ல விரும்பிய கருத்தைத்தான் உரையாசிரியர்களும் கூறியிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. உரையாசிரியர்களின் கருத்துக்கள் இரண்டாம்நிலைத் தரவுகளே. மூலபாடம்தான் முதல்நிலைத் தரவாகக் கொள்ளத்தக்கது. 

உரையாசிரியர்கள் அவரவர் காலத்தில் நிலவிவந்த நம்பிக்கைகளுக்கேற்பத் தற்குறிப்பேற்றியோ அல்லது நடுநிலையுடனோ பாடலுக்குப் பொருள் கண்டிருக்கவே வாய்ப்பிருக்கிறது. தமிழ் ஹிந்து தளத்தில் 'விய' ஆண்டுக்கு 'இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியையும்', கணியன் பூங்குன்றனாரின் பாடலுக்கு ஊழ்வினைக் கருத்தையும் தற்குறிப்பேற்றி இணைத்துப் பார்ப்பதையும் புராணம் தொடர்பான சங்க இலக்கியப் பாடலடிகளுக்கு அப்புராணங்களைக் காட்டியே பரிமேலழகர் போன்றவர்கள் நடுநிலையுடன் உரையெழுதியதையும் போல. எனவே, உரையாசிரியர்களின் கருத்தைச் சான்றாக முன்வைக்கும்போது மூலபாடத்திலுள்ள செய்யுள் அடிகளையும் சரிபார்ப்பது அவசியமாகிறது.

அந்த வகையில், நெடுநல்வாடைப் பாடலின் 'ஆடு தலையாக' என்ற சொல்லைப் பார்க்கும்போது உண்மையிலேயே 'மேடராசி முதல் இராசிதானா?' என்று ஐயம் எழுகின்றது. சூரியன் சுற்றுகிறது என்ற தொடரே அதன் பாதையை வட்டம் என்கிறது. வட்டத்திற்கு ஏது தலையும் வாலும்? அப்படியே ஏதாவதொரு புள்ளியிலிருந்து தொடங்க வேண்டும் என்றாலும் தலையாக என்பதை 'முதலாக' என்று ஏற்றுக் கொள்வதிலும் சிக்கல் இருக்கிறது. உதாரணமாக, எங்கள் குழுவைக் குறிப்பிடும்போது, கோகுலை நன்கு அறிந்தவர்கள் 'கோகுல் முதலான வரலாறு.காம் உறுப்பினர்கள்' என்றும், லலிதாராமை நன்கு அறிந்தவர்கள் 'ராம் முதலான வரலாறு.காம் உறுப்பினர்கள்' என்றும் குறிப்பிடுவார்கள். நாங்கள் அனைவரும் சமம் எனும்போது, இங்குப் பயன்படுத்தப்படும் 'முதலான' என்ற சொல் அவரவர் பார்வையையே குறிக்கிறது.

அதுமட்டுமின்றி, பரிபாடல் 11ல் 'எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்' என்ற அடிகளில் எரி – கார்த்திகை, சடை – திருவாதிரை, வேழம் – பரணி 'முதலென' என்று வருவதால், முதல் நட்சத்திரம் அசுவினி என்றல்லாமல், 'கார்த்திகை' என்று கொள்ளலாமா? அல்லது இதை இன்னொரு விதமாகப் பார்க்கலாம். அடுத்த அடியில் 'தெருவிடைப் படுத்த' என்று வருவதால், 12 இராசிகளைக் கார்த்திகைக்குரிய இடபவீதி (கன்னி, துலாம், மீனம், மேடம்), திருவாதிரைக்குரிய மிதுனவீதி (விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்) மற்றும் பரணிக்குரிய மேடவீதி (இடபம், மிதுனம், கடகம், சிம்மம்) என்று பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் கூறும் வரிசையில் பார்த்தாலும் வீதிகளில் ரிஷபமும் இராசிகளில் (இடபவீதியின் முதல் இராசியான) கன்னியுமே முதலாக வருகின்றன. எனவே, நெடுநல்வாடையில் முதல் இராசியாக மேடராசிதான் குறிக்கப்படுகிறதா என்பது தெளிவாக இல்லை.

சோதிடத்தில் மட்டுமே மேட ராசியும் சித்திரையும் இணைத்துக் கூறப்படுகின்றன. எந்தவொரு சங்க இலக்கியத்திலும் அத்தகைய இணைப்பு இல்லை. தமிழ் ஹிந்து தளத்தில் வெளியாகி இருக்கும் 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 1' என்னும் கட்டுரையின் இறுதியிலும் இதற்கு ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது. 

'மாதம் என்னும் சொல்லே, மதி என்னும் சொல்லிலிருந்துதான் உண்டாயிற்று. எந்த நட்சத்திரத்தில் மதி, முழு மதியாகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயரில்தான் சந்திர மாதங்கள் சொல்லப்பட்டன. இந்த முறைக்கு சாந்திரமானம் (Lunar Calender) என்று பெயர். இந்தப் பெயர்கள் நாளடைவில் சூரிய மாதங்களுக்கும் சேர்த்து, தற்காலத்தில், சூரியமாதப் பெயர்களாகி விட்டன.' - ஜெயஸ்ரீ சாரநாதன் -'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 1'.

இது தவறு. இக்கட்டுரையை வாசிக்க நேர்ந்த 8-ஜனவரி-2012 அன்று பௌர்ணமி இருந்தது. மாதம் மார்கழி. இக்கட்டுரையின்படி பார்த்தால் அன்று மார்கழி என்று தமிழில் சொல்லப்படும் மிருகசீரிஷ நட்சத்திரம்தான் இருக்கவேண்டும். ஆனால் அன்று இருந்ததோ அதிகாலை 5:45 வரை திருவாதிரை நட்சத்திரமும், அதன் பின்னர் புனர்பூசமும். அதற்கு அடுத்த நாள் 9-ஜனவரி-2012 அன்று பௌர்ணமி பகல் 13:39 வரை இருக்க, புனர்பூசம் காலை 6:20 வரையும் அதன் பின்னர் பூசம் நட்சத்திரமும் இருந்தன. 
பார்க்க: http://www.tamildailycalendar.com/tamil_monthly_calendar.php?month=01&year=2012&Submit=Submit. 

'மார்கழி, திருவாதிரைப் பௌர்ணமியில் ஆரம்பிக்கும் இந்த நோன்பு தொடர்பாக' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.

அடுத்த கட்டுரையிலேயே மார்கழிப் பௌர்ணமி ஏன் மிருகசீரிஷத்தில் வராமல் திருவாதிரையில் வருகிறது?

'12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும்' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.
'வியாழன் கிரகத்தின் 60 வருட சுழற்சியின் பெயர்கள்'' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.


இரண்டு கட்டுரைகளுக்கும் இடையே ஏன் இத்தனை முரண்பாடுகள்? 

'சூரியன் சிம்ம ராசி ஏகினவுடன், பொதியில் முனிவனான அகத்தியன் (Canopus) சூரிய உதயத்திற்குமுன் எழும்போது (Heliacal rising), சைய மலையில் மழை பொழியும், என்கிறது பரிபாடல்- 11. இது மேற்குத் தொடர் மலை. இன்று அம்மலை நம் வசம் இல்லை. அங்கு மழை பெய்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் இல்லை. மூவேந்தர் ஆட்சி அஸ்தமித்த உடனேயே தமிழ் நிலமும் மாறிவிட்டது, மக்கள் வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு இடைக் காட்டு சித்தர் போன்றவர்கள், சூரிய மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, 60 வருடப் பெயர்களையும் சூரிய வருடங்களுக்குக் கொடுத்திருப்பர்.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.

பரிபாடல் 11ன் உரையைப் படித்த கட்டுரையாளர் பார்த்த நிலப்படத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையும் அதிலிருந்து உருவாகும் வைகை நதியும் தமிழ்நாட்டில் இல்லை போலிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்ததால் வைகையில் வெள்ளம் பெருகிக் கரையை உடைத்தது என்பதுதான் பரிபாடல் 11ம் பாடலின் 1 முதல் 15 வரையிலான அடிகள் உணர்த்தும் செய்தி. மூவேந்தர் ஆட்சி முடிந்த பிறகு வைகைக்கு நீர் எங்கிருந்து வருகிறது? அகத்தியன் சூரிய உதயத்திற்கு முன் எழுவதெல்லாம் இப்பாடலில் இல்லவே இல்லை. Heliacal rising என்பதற்கு Dictionary.com தரும் பொருள்: 'the rising of a celestial object at approximately the same time as the rising of the sun' என்பது. 'அகத்தியன் பெயர்கொண்ட விண்மீன் தன் உயர்ந்த இடத்தைக் கடந்து மிதுனத்தைப் பொருந்தியது' என்பதுதான் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையின் முதற்பேராசிரியராகவும் பின்னர் துறைத்தலைவராகவும் திகழ்ந்த திரு. இரா. சாரங்கபாணி அவர்கள் எழுதிய உரை. 'பொதியில் முனிவன் புரைவரைக் கீறி மிதுனம் அடைய' என்ற மூலபாடமும் இக்கருத்துடன் பொருந்தி வருகிறது. பல்வேறு பெயர்களையும் மேற்கோள்களையும் கட்டுரை முழுவதும் தந்தால் மட்டும் போதாது. அவற்றுக்குள்ள தொடர்பு முறையாக விளக்கப்படவேண்டும். அவ்விளக்கம் படிப்போருக்குச் சிந்தனைத் தொடர்ச்சியைத் தரவேண்டும்.

'பரிபாடல் 11-இல் கார் காலத்தில் வரும் முதல் மழை, சரியான சமயத்தில்தான் வந்துள்ளதா என்று சொல்லிவிட்டுத்தான், புலவர், அந்த மார்கழி மாதம் பௌர்ணமியில் துவங்கும் பாவை நோன்பு பற்றி விவரிக்கின்றார்.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.

இது பரிபாடல் 11ம் பாடலின் தவறான புரிதல் அல்லது தற்குறிப்பேற்றல். 'சைய மலையில் மழை பொழிந்ததால் வைகையில் வெள்ளம் பெருகி அதன் கரையைத் தாக்கி அழித்தது' என்பதுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை சரியான சமயத்தில் வந்ததா, தவறான நேரத்தில் வந்ததா என்பதெல்லாம் கட்டுரையாளரின் தற்குறிப்பேற்றம். இந்தப் பாடலின் 77ம் அடியில்தான் மார்கழிப் பௌர்ணமி திருவாதிரையில் வந்ததாகக் கூறப்படுகிறது.

'மார்கழி விடியலுக்குமுன், காற்று மண்டலத்தில் மக்கள் வெளியில் செல்வதால் உண்டாகும் சலசலப்பும், சில்லிடும் ஆற்று நீரில் குளிப்பதால் ஆற்று நீரில் ஏற்படும் சலனங்களும், மணலில் பாவைகள் செய்து உற்சாகக் கூக்குரலிடும் சிறுமியர் எழுப்பும் சப்தமும், ஆற்றங்கரையில், ஹோமத் தீ வளர்த்து உண்டாக்கும் வெம்மையும், தெய்வம் தொழும் போது எழுப்பும் ஒலி அலைகளும், என்றைக்கெல்லாம் அவ்வாறு செய்யபட்டனவோ, அன்றிலிருந்து, 195 – ஆம் நாள் மழை பெய்வதை உறுதி செய்யும் என்பது சோதிட விதி. இது தவறுவதில்லை.'
'காலம் சுழன்றாலும், இந்த மார்கழி குறித்த – மழை வரச் செய்யக் கூடிய – விடியலுக்குமுன் செய்ய வேண்டிய சலசலப்புகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.'
'தற்காலத்தில், ஐயப்ப பக்தர்கள் அந்த உத்தம நன்மையைச் செய்கிறார்கள். விடியலுக்கு முன், அவர்கள் கோவிலுக்குச் செல்லுதலும், பஜனை பாடுதலும், முற்காலத்தில் பாவை நோன்பின் போது சுற்றுப்புற சூழலில் உண்டாக்கப்பட்ட சலசலப்பிற்கு ஒப்பானது.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.


அப்படியானால் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் மழை பொய்த்துப் பஞ்சம் ஏற்பட்டபோது சோதிடவிதி தவறியது எதனால்? அப்பஞ்சம் ஏற்பட்ட ஆண்டுகளில் இத்தகைய சலசலப்புகள் நிகழவில்லையா? சிரபுஞ்சியில் இச்சலசலப்புகள் அதிக அளவில் நிகழ்வதற்கும் கவுகாத்தியில் குறைவாக நிகழ்வதற்கும் சான்றுகள் உள்ளனவா? அல்லது இச்சோதிடவிதி மூவேந்தர் ஆட்சிக்குப் பிந்தைய தமிழ்நாட்டுக்கு மட்டும் எழுதப்பட்டதா?

'வருடை என்னும் ஆட்டுக்கு நம் முன்னோர் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதற்கு 'வான வரம்பன்' என்று பெயர்பெற்ற, ஆடு கோட்பாட்டுச் சேரலாதனே சாட்சி.'
'கோட்படுதல் என்றால், பிடித்தல் அல்லது கட்டுதல் என்று பொருள். ஆட்டைப் பிடித்து வந்தமையால் இந்த அரசனுக்கு இப்படி ஒரு பட்டப் பெயர்.'
'இமயத்தை எட்டிய இவன் முன்னோன் 'இமய வரம்பன்' என்று பெயர் பெற்றான். இவன் சென்றது தண்டகாரண்யம் என்றாலும், அங்கு சென்றதன் காரணமாக "வான வரம்பன்" என்று பெயர் பெற்றான் என்று பதிகம் கூறுவதால், அந்த வனத்தைக் கொண்டுள்ள விந்திய மலைச் சிகரத்தையே எட்டி உள்ளான் என்று தெரிகிறது. அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று ஆராய்ந்தால்- அவன் போரிடச் செல்லவில்லை. மலைச் சிகரங்களில் வாழும், வருடை என்னும் மலையாட்டைப் பிடித்துக் கொண்டு வரவேதான் அங்கு சென்றிருக்கிறான் என்று தெரிகிறது. எந்த அளவு வருடை ஆட்டுக்கு முக்கியத்துவம் இருந்திருந்தால், சேர அரசன், தானே சென்று அதைப் பிடித்து வந்திருப்பான்? அதன் காரணமாக பட்டப் பெயரையும் பெற்றிருப்பான்?' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 1'.


கோயிலூர் மடாலயத்தின் மூலமாக முனைவர் தமிழண்ணல் அவர்களும் முனைவர் சுப. அண்ணாமலை அவர்களும் பதிப்பித்த முனைவர் அ.மா. பரிமணம் அவர்கள் எழுதிய பதிற்றுப்பத்து உரையில், 'தண்டகாரண்யம் என்னும் நிலப்பகுதி ஆரிய நாட்டிலுள்ள ஒரு நாடு என்று பழைய உரையாசிரியர் குறிப்பர். இது, முன்னாள் பம்பாய் (மும்பை) மாகாணப் பகுதியில் இருந்தது என்று ஆய்வாளர் சுட்டுவர். பதிகத்தில் இடம்பெறும் "தண்டகாரனியத்துக் கோட்பட்ட வருடை" என்பது கொண்டு, "இச்சேரன் ஆடுகளைக் கவர்ந்து வந்தமையால், ஆடுகோட்பாட்டுச் சேரன் எனப்பட்டான்" என்று சிலர் விளக்குவர். "ஆடு" என்னும் சொல் அக்காலத்தில் வெற்றியைக் குறிக்கும் சொல்லாக விளங்கியதாலும், பண்டு "ஆடு" யாடு என்றே குறிப்பிடப்பட்டு வந்துள்ளமையாலும் "சேரன் போரில் வெற்றி கொள்வதனையே குறிக்கோளாக்க் கொண்டு செயல்பட்டவன்" என்னும் கருத்தில் இவ்வாறு கூறப்பட்டான் என்னும் ஆய்வாளர் கருத்தே ஏற்புடையதாகும்' என்று கூறியுள்ளார். ஆறாம் பத்தின் பதிகம் தவிரப் பிற பாடல்களில் இந்த 'ஆடு' சுட்டப்படாததால், மூலபாடத்தைச் சரிபார்த்தாலும் இக்கருத்தே பொருந்தி வருகிறது. மதுரைத் தமிழ்ப் பேரகராதியும் அறிஞர் நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியும் 'ஆடு' என்பதற்கு ஆடுதல், விலங்கு என்பன தவிர, கூர்மை, வெற்றி என்னும் பொருட்களையும் தருகின்றன. எனவே, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டகாரணியத்துக்குப் போரிடத்தான் சென்றான் என்பதும் தன் கொல்லைப்புறத்தில் கட்டிவைத்துக் கொள்வதற்காகத் தானே சென்று வருடையைக் கொண்டுவரவில்லை என்பதும் தெளிவாகிறது. வெற்றி பெற்றவர்கள் கவர்ந்து வரும் பெருமையைப் பெற்றதால் ஆடு முக்கியத்துவம் பெறுகிறது; அதனால் மேடராசியே தலையாயது என்று சொன்னால், ஆநிரை கவர்தலுக்கு இதைவிடப் பல நேரடிச் சான்றுகள் உள்ளன. அவற்றை முன்வைத்து, இடப ராசிதான் முதல் ராசி என்றும் வைகாசியில்தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும் சொல்லலாமா? மற்றபடி, 'நம் தமிழ் முன்னோருக்கு, இமயமும், பொதியமும் நினைத்தாலே இனிக்கும் இடங்கள்' என்பனவெல்லாம் அனுமானங்களே அன்றி வேறன்று.

சித்திரையைப் புத்தாண்டாக நியாயப்படுத்துபவர்கள் அனைவரின் கட்டுரைகளிலும் இவைபோல் வலிந்து இழுத்து வளைத்து நிறுவ முயலும் தன்மையே விரவிக் கிடக்கிறது. எனவே, சித்திரைதான் தமிழ்ப்புத்தாண்டு என்ற முடிவை நம்மால் ஏற்க முடியவில்லை. இது போகக் கல்வெட்டு ஆதாரம் இருப்பதாகவும் தமிழ் ஹிந்து தளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'பத்தாம் நூற்றாண்டில் பிராமண, சத்திரிய, விஸ்வகர்மா மற்றும் சூத்திர வர்ணத்தைச் சார்ந்த 98 ஜாதியினர் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடியதாகக் கல்வெட்டு உள்ளதே' - பால கௌதமன் -'திரிபே வரலாறாக'.

எந்தக் கோயிலின் எந்தப் பகுதியில் உள்ள கல்வெட்டு இதைக் கூறுகிறது என்று தெரிவிப்பதுடன் கல்வெட்டின் முழுப்பாடத்தையும் வெளியிட்டால் நன்றாகும்.

நாம் ஆராய்ந்தவரை கீழ்க்கண்ட தரவுகள் நமக்குப் புலப்படுகின்றன.

1. சங்க காலத்தில் தமிழன் புத்தாண்டு கொண்டாடியதற்குச் சான்றுகள் இல்லை.
2. இன்று வழக்கிலிருக்கும் 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் இல்லை.
3. சங்க இலக்கியங்களில் இந்த அறுபதில் எந்த ஆண்டின் பெயரும் தமிழ்ப்படுத்தப்பட்டோ அப்படியேவோ இடம்பெறவில்லை.
4. சிலப்பதிகாரத்தில்தான் முதன்முதலில் சித்திரை என்ற பெயரே வருகிறது. அதுவும் புத்தாண்டு குறித்த தரவுடன் அன்று.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் 'சித்திரையில் புத்தாண்டு' என்பது இடையில் வந்த வழக்கமேயன்றிப் பழங்காலத் தமிழர்களுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்மண்ணில் வடபுலத்தவர், இசுலாமியர், கிறித்தவர், நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான அயலகச் சிந்தனைத் தாக்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 

பி.டி.சீனிவாச ஐயங்காரும் தமது "History of the Tamils from the earliest times to 600 AD" என்னும் நூலில் இதே கருத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.

'வேத வேள்விகள், இதிகாச புராணச் செய்திகள் எல்லாம் மிக மிகச் சிறு அளவே சங்க நூல்களில் கூறப்படுகின்றன. அவற்றோடு வானியல் அறிவும் சோதிட மூடநம்பிக்கைகளும்கூட மெதுவாகத் தென்னிந்தியாவிற்குப் பரவின. திங்கள், ஞாயிறு, அவை விண்ணில் செல்லும் பாதையை 27 உடுக்களோடு இணைத்துக் கூறுதல் ஆகியவை மட்டுமே வேதங்கள் கூறுவது. கோள்கள் தன்மையும் வான்வெளியில் அவற்றின் பாதைகளும் பற்றிய அறிவு வேதங்களிலோ வேதாந்தங்களிலோ இல்லை. அவை பற்றிய அறிவும் அவற்றோடு பிணைந்த சோதிடக் கருத்துக்களும் காந்தாரம், சிந்துப் பகுதிகளில் யவன (இந்தோ கிரேக்கர்) அரசுகள் அமைந்த காலத்தில் அவர்களிடம் இருந்து கி.மு. 200 – கி.பி. 400 காலகட்டத்தில் வட இந்தியாவில் பரவின. பின்னர் கி.பி. 5ம் நூற்றாண்டில் தென் இந்தியாவிற்கும் பரவினதாகத் தோன்றுகிறது.' – பக். 215, 'தமிழர் வரலாறு – மூலம் : பி.டி.சீனிவாச ஐயங்கார் – தமிழாக்கம் : பி.இராமநாதன்'.

இவைபோன்ற சிந்தனை மாற்றங்களுள் ஒன்றுதான் சங்க இலக்கியத்தில் கொண்டாடப்படாத புத்தாண்டு பின்னாளில் சித்திரையில் கொண்டாடப்பட்டதும். ஆனால், நினைவு தெரிந்த நாள்முதலாய்ப் புத்தாண்டு கொண்டாடிப் பழகிவிட்ட இன்றைய தலைமுறைத் தமிழர்கள் ஒருவேளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட விரும்பினால் எப்போது கொண்டாடுவது பொருத்தம்?

சிந்தனைக் கலப்பு நிகழ்வதற்கு முன்னர் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சங்க இலக்கியங்களில் எந்த மாதம் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது?

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" - நற்றிணை (80 மருதம் - பூதன்தேவனார்)

"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" - குறுந்தொகை (196. மருதம் - தோழி கூற்று)

"நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து" - ஐங்குறுநூறு (84, 9. புலவி விராய பத்து)

"வையெயிற் றவர்நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ" - கலித்தொகை (59, தளை நெகிழ்... எனத்தொடங்கும் பாடல்)


இன்று வாசிக்கக் கிடைக்கும் பழந்தமிழர்தம் இலக்கியங்களில் தமிழ் அறிஞர்களால் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நற்றிணையிலும் குறுந்தொகையிலும் ஐங்குறுநூற்றிலும் தை மாதத்தை மட்டுமே சிறப்பித்திருக்கிறார்கள்.

தைத்திங்கள் சங்க இலக்கியங்களில் இத்தனை இடங்களில் இடம்பெற்றிருக்க, சித்திரை முதன்முதலில் எங்கே வருகிறது என்று தெரியுமா? சிலம்பில் இந்திர விழவூரெடுத்த காதையில்தான். ஆகவே, தையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதே பொருத்தம் என்று உரைத்த தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் கா.நமச்சிவாயனார், தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பி.டி. இராஜன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகிய அறிஞர்களின் முடிவு ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

இலக்கியங்களில் சிறப்பிக்கப்பட்டதால் மட்டுமே புத்தாண்டு என ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்று கேட்பவர்கள் கல்வெட்டுச் சான்றையும் பார்க்கவேண்டும். சித்திரையில்தான் புத்தாண்டு என்பதை வலியுறுத்தும் தமிழ் ஹிந்து தளம் உட்படப் பல்வேறு இணைய தளங்கள் சான்றாகச் சுட்டும் ஆய்வாளர் திரு. எஸ். இராமச்சந்திரன் அவர்களின் கூற்றான 'புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்)'என்ற கருதுகோளின் அடிப்படையில் பார்த்தாலும், சங்ககாலத்தில் தை முதல்நாள் உத்தராயனத் தொடக்கமாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், பிற்காலச் சோழர் காலத்தில் தை முதல்நாள் அவ்வாறு கருதப்பட்டதற்குத் திருவலஞ்சுழிக் கல்வெட்டுகள் (முதலாம் இராஜராஜரின் 14ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு) கட்டியங் கூறுகின்றது என்று திரு. எஸ். இராமச்சந்திரனே ஒப்புக்கொள்கிறார். எனவே, உத்தராயனத் தொடக்கத்தை அடிப்படையாகக் கொள்ள விரும்புபவர்களும் தை மாதத்தை ஆண்டுத் தொடக்கமாகக் கொள்ளலாம்.

அன்புடன்
ஆசிரியர் குழு

=======================================================================

இது போல பலக்கருத்துக்கள் பன்மடங்கு உள்ளன,
எப்படிப்பார்த்தாலும் நீங்க இந்த வரிகளை படிப்பவராய் இருந்தால் இரண்டு வகையில் தான் இருப்பீங்க 

ஒன்னு மேல இருந்து குபீர்ன்னு கீழ குதிச்சு இத படிக்க வந்துருந்தா கருத்து நிச்சயம் வெளங்காது, உங்களுக்கு இது ஒரு விடுமறை நாளே :P :P :P மேலும் நீங்க இவ்வகை தமிழர் மட்டுமே (இது எதைப்பற்றியுமே கவலைபடாதா, தெரிந்துகொள்ள விரும்பாதா தமிழர்)

இரண்டாம் வகை எனில், எல்லாவற்றையும் படித்து ஓர் அளவிற்கு யார் கூறுவது உண்மை பொய் என்று தெரிந்திருக்கும், நீங்க செய்யவேண்டியது எவ்வகை தமிழர் என ஆராயுங்கள், வரலாறு தெரியாத மனிதன் செழிக்க மாட்டான், இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாமல் இருக்கும் என்று மட்டும் நினைக்கவேண்டாம், இப்படி நினைத்து நினைத்து தான் இந்த நிலையில் உள்ளோம், மேலும் ரணங்களை சேர்த்து உங்கள் சந்ததியில் தமிழ் இழந்து விடபோகிறது, இந்த உலகமயமாக்கள் காலக்காட்டத்தில், அப்படி தான் இந்த இயற்க்கை வளம் கொள்ளையடிக்க பட்டு வருகிறது :( :( 

=======================================================================

No comments:

Post a Comment